அடுத்தடுத்து அடி சென்னைக்கு கவலையில் ரசிகர்கள்

சென்னை அணி வீரரான சுரேஷ் ரெய்னா அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்தாண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையில் இருந்த சென்னை அணி, மீண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்பி இரண்டு அட்டகாச வெற்றிகளை பதிவு செய்தது.

மும்பைக்கு எதிரான போட்டியின் போது கீதர் ஜாதவ காயம் காரணமாக பாதியிலே வெளியேறினார். அதன் பின் காயத்துடன் வந்து கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து சென்னை அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

அதன் பின் காயம் காரணமாக கீதர் ஜாதவ் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை அணியின் சின்ன தல என்றழைக்கப்படும் ரெய்னா அடுத்து வரும் 15 மற்றும் 20-ஆம் திகதிகளுக்கான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது காயத்தால் அவதிப்பட்டார். இருப்பினும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கினார்.

மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன் காரணமாகவே ரெய்னா போட்டியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜாதவ்வைத் தொடர்ந்து ரெய்னாவும் தற்போது விலகியுள்ளதால், சென்னை ரசிகர்கள் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.