எமது கிராமம்

 

அமைவிடம் 

 
இலங்கை திருநாட்டில் சைவமும் தமிழும் மணம் வீசுகின்ற கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவிலிருந்து மேற்கில் சுமார் 05 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது.  வடக்கே மட்டக்களப்பு வாவியினையும்  மேற்கே பச்சை பசேலென வயல் வெளியினையும் தெற்கு, கிழக்கில் சம்மாந்துறையினை எல்லையாக கொண்டு தனியே இந்துக்களை கொண்ட கிராமம் ஆகும்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மை சாகுபடி செய்பவர்களாகவும் அரச நிறுவனங்களில் தொழில்புரிபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
 
 
வீரமுனைக் கிராமத்தின் தோற்ற வரலாறு 
 
சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்தினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமான ஒன்றாக காணப்பட்டது. எனினும் தன் மகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த குமாராங்குசனுக்கு தன் மகள் இன்னுமொரு நாட்டிற்கு மருமகளாக செல்வதென்பது அவனுக்கு பெருத்த மனவேதனையை கொடுத்தது. எனினும் பெண் பிள்ளை என்று பெற்றுவிட்டால் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது என்பது பாமர மக்கள் முதல் பாராளும் மன்னன் வரை வழக்கமான விடயமாகக் காணப்பட்டது. இருந்த போதிலும் தன் மகளை இன்னுமொரு நாட்டு மன்னனுக்கு மனைவியாக்கி அனுப்புவதென்ற திருப்தியுடன் மனவேதனையை மூடி மறைத்தவனாய் குமராங்குசன் தன் மகளையும் மருமகனையும் சிங்கை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டான்.
 
தன்னை பெற்றெடுத்து ஆசையாய் வளர்த்த பாசமிக்க பெற்றோரினை விட்டுப் பிரிந்து செல்வது சீர்பாததேவிக்கும் பெருத்த வேதனையாக இருந்த போதிலும் தன் மனதிற்கு பிடித்த கட்டிளம் காளையை திருமணம் செய்த மகிழ்ச்சியினால் தன் கவலைகளையெல்லாம் மறந்தவளாய் வாலசிங்கனுடன் சிங்கை நகர் செல்வதற்கு சீர்பாததேவியும் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டாள். என்னதான் அரசிளம் குமாரியாக இருந்தாலும் அவளும் பெண்தானே! இத்தனை வருடம் தன் தாய் நாட்டிலே வாழ்ந்தாலும் இனி ஒரு புதிய தேசத்தில் புதிய சுற்றத்தாருடன் வாழ்வதென்பது சீர்பாததேவிக்கு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியது.
 
தன்மகளின் மனக்கலக்கத்தினை உளமார அறிந்து கொண்ட குமாராங்குசன் தன்மகளின் கவலையினை தீர்க்கும் நோக்குடன் தன் அரச குலத்தவர்களில் சிலரை தன்மகளுடன் சிங்கை நகர் அனுப்புவதற்கு முடிவு செய்தான். இதன்படி சோழ நாட்டிலே திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டுமாவடி முதலான இடங்களில் வாழ்ந்த அரசகுலத்தவர், அந்தணர்கள், வேளாளர், வணிகர் என்னும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் தன்மகளுடன் துணையாக அனுப்ப முடிவு செய்தான். இதன் பிரகாரம் சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, வெள்ளாயி, நரையாகி, முழவன் போன்ற ஏழு அரசகுலத்தவர்களையும் சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார், முதலிய அந்தணர்கள், கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்க செட்டி, சதாசிவச் செட்டி, சங்கரச்செட்டி போன்ற செட்டிமார்கள் போன்றோர் தங்களின் மனைவிமாருடன் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டனர். இவர்களும் மன்னவனின் கட்டளைக்கிணங்க சீர்பாததேவி என்னும் இளவரசிக்கு துணையாக சிங்கை நாடு செல்ல பூரண மனதுடன் தயாராகினர்.
 
கப்பலிலே கடல்வழியாக சிங்கை நாட்டுக்கு பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த வேளையில் தன் அன்பு மகளுக்கு சீர்பாததேவியின் தாய் அரண்மனையிலே தானும் தன் சோழ குல மகாராணிகளும் பரம்பரை பரம்பரையாக வைத்து வழிபட்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலினை பாதுகாப்புக்காக வழங்கினார். தன் அன்னையின் அன்புப்பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட சீர்பாததேவி; தன் கணவன் வாலசிங்கனுடன் சோழ மன்னனின் பிரதிநிதிகள் சூழ்ந்திருக்க கப்பலிலே அமர்ந்திருந்து அரசகுல பெண்களின் வாழ்த்தொலிகள் முழங்க கடல்வழியாக பயணத்தினை இறை தியானத்துடன் ஆரம்பித்தார். சிறப்பு பொருந்திய அரசகுலத்தவர்களின் கப்பல் என்ற படியால் அலை எழுப்புகின்ற கடல் அன்னை கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வழி கொடுத்தாள்.
 
தங்கு தடையின்றி கப்பல் வட இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இவ்வாறு வட இலங்கையின் சிங்கை நகரினை கப்பல் அண்மித்த வேளையிலே சீர்பாததேவி தன் அன்பு மன்னவனிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்தாள். அதாவது சிங்கை அரசனின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் தான் பார்வையிட வேண்டுமென்பதே அந்த வேண்டுகோள். தன் மனைவி தன்னிடம் கேட்கின்ற அந்த வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட மன்னவன் இளவரசியின் விருப்பத்திற்கிணங்க தன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் பார்வையிடுவதற்காக கப்பலை கிழக்கு கரையோரமாக திருப்புமாறு கட்டளை பிறப்பித்தான். மன்னவனின் கட்டளைக்கிணங்க கப்பலும் கிழக்கு கரையோரமாக நகர்ந்தது.
 
இலங்கையின் வளம் பொருந்தியதும் செழிப்பான பிரதேசமாகவும் காணப்பட்ட கிழக்கின் அழகினை கப்பலில் இருந்தவர்கள் ரசித்துக் கொண்டு சென்றனர். கிழக்கிலங்கையின் நீர் வளமும் நில வளமும் பச்சைப்பசேலென்று செழித்துக்கிடந்த மரங்களும் நீலச்சேலை விரிக்கப்பட்டது போன்று காணப்பட்ட கிழக்குக்கடலின் எழிலும் அவர்களை ஆச்சரியத்திற்கும் ரசனை உணர்விற்கும் இட்டுச் சென்றது. இவ்வாறு கிழக்கின் எழிலினை ரசித்தவண்ணம் உல்லாசமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்கள் கிழக்கின் முக்கிய இடமாக விளங்குகின்ற திருகோணமலை கடற் பிரதேசத்திலே பயணித்துக் கொண்டிருந்தபோது திருக்கோணேசர் பெருமானின் ஆலயம் அவர்களின் கண்களுக்கு புலப்பட்டது. கோணேசர் பெருமானின் ஆலயத்திற்கு கப்பலில் இருந்த அனைவரும் கோணேசப் பெருமானை மனமுருக வழிபட்டனர். இவ்வேளையில் கப்பலில் கோளாறு ஏற்படட்டது போல் கப்பல் ஆலயத்திற்கு முன்பாக தடைப்பட்டு நின்றது. கப்பலின் இவ்வாறான நிலமை அதிலிருந்த அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
 
“கோணேசப் பெருமானை மனதிலே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு கப்பல் தடைப்பட்டிருப்பது இறைவனின் செயலன்றி வேறில்லை என நினைத்த இளவரசியார் கப்பலில் இருந்த தன்னுடன் வந்தவர்களிடம் கப்பல் நின்றமைக்கான காரணத்தினை கண்டறியுமாறு பணித்தாள். அவ்வேளையில் அங்கிருந்தவர்களில் சிந்தன் என்பவன் அதனை அறியும் பொருட்டு நீரிலே இறங்கி கப்பலின் அடியில் சென்று கப்பல் ஏதாவது பாறைகளில் முட்டி இருக்கின்றதா? என்பதனை ஆராய்ந்தான். எனினும் கப்பல் அப்படியான எந்த ஒரு பொருளிலும் முட்டி மோதவில்லை. சாதாரணமான நிலையிலேயே காணப்பட்டது. அப்போது சிந்தனுடைய கண்களில் விக்கிரகம் ஒன்று தென்பட்டது. அதனை அருகே சென்று பார்த்தபோது அது ஒரு விநாயகர் விக்கிரகம் என்பது சிந்தனுக்கு தெளிவாகியது. எனவே இவ்விடயத்தினை அவன் கப்பலிலே உள்வர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தினான்.
 
இதனை அறிந்த அரசியார் மீண்டும் ஒரு முறை இறைவனை தியானித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவ்விக்கிரகத்தினை மேலே கொண்டு வருமாறு பணித்தாள். அரசியாரின் வேண்டுகோளிற்கிணங்க சிந்தனும் அவ்விக்கிரகத்தினை நீரில் இருந்து வெளியேற்றி கப்பலிலே சேர்த்தான். அதனைக்கண்ட மன்னன் அரசியார் உட்பட்ட அனைவரும் வியப்புற்றனர். எவ்வாறு இவ்விக்கிரகம் கடலில் வந்து சேர்ந்தது என பலவாறும் வினவினர். எது எவ்வாறாயினும் இறைவன் செயலாகத்தான் இவ்விக்கிரகம் தமக்கு கிடைத்ததாக நினைத்த சீர்பாததேவியார் அவ்விக்கிரகத்தின்பால் ஒரு நேர்த்திக்கடனை முன்வைத்தார். அதாவது தாங்கள் பயணம் செய்யும் இந்தக்கப்பல் எந்த இடத்தில் தரித்து நிற்கின்றதோ அவ்விடத்தில் இவ்விக்கிரகத்தினை வைத்து பிரம்மாண்டமான ஒரு ஆலயத்தினை அமைப்பதாக கூறி கப்பலினை தொடாந்து செலுத்துமாறு கூறினார். அதன்படி கப்பலும் தொர்ந்து பயணத்தினை ஆரம்பித்தது.
 
பயணத்தினை தொடர்ந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியின் தெற்குத் திசைநோக்கி பயணித்து வாவியின் அந்தமான வீரர்முனை என்ற இடத்தினை கரை தட்டியது. இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது. அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது. கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது.
 
இவ்வாறு வீரர்முனையிலே கப்பல் கரை தட்டி நின்றதும் சீர்பாததேவி மிகவும் மனமகிழ்ச்சியடைந்தார். காரணம் வீரர்முனையின் இயற்கை அழகும் வளம் பொருந்திய அமைவிடமும் ஆகும். மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலே ஆலயம் அமைக்கப்படுகின்ற போதுதான் அவ்வாலயத்தினை பராமரித்து அபிவிருத்தி செய்ய முடியும். எனவே வீரர்முனை என்கின்ற இடமானது மக்கள் குடியிருப்புக்களை அமைப்பதற்கேற்ற அனைத்து விதமான வளங்களையும் வசதிவாய்ப்புக்களையும் கொண்டதொரு இடமாக காணப்பட்டது. இவ்வாறான இடத்தில் தங்களுக்கு கிடைத்த விநாயர் விக்கிரகத்தினை வைத்து அழகியதொரு ஆலயத்தினை அமைத்து இவ்விடத்தின் அழகினை மேலும் செழிப்படையச் செய்யும் நோக்கோடு கப்பலில் வந்தவர்கள் அனைவரும் தங்குவதற்காக அவ்விடத்தில் கூடாரங்கள் அமைக்கப்படன.
 
வீரர்முனையிலே ஆலயம் அமைக்கும்பணி துரிதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்காலப்பகுதியில் வீரர்முனையிலே எவரும் குடியிருக்காமையினாலும் கப்பலில் வந்தவர்கள் ஆலயம் அமைப்பதற்குப் போதாமையினாலும் பாலசிங்கன் வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்தவர்களை ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தினான். சிறந்த தேர்ச்சி பெற்ற கட்டிடக்கலைஞர்களினதும் மக்களினதும் முழுமூச்சான செயற்பாட்டினால் அழகியதும் சிறப்புமிக்கதுமான ஆலயம் அமைக்கப்பட்டது. சீர்பாததேவியின் நேர்கடன் நிறைவடைகின்ற தருணம் நெருங்கியதைத் தொடர்ந்து அரசியாரும் மன்னவனும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஆலயத்தின் நிர்மாண வேலைகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகளான கிரியைகள் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
 
இதன் பலனாக சோதிடர் குறிப்பிட்டதும் ஆகம முறைக்கு ஏற்றதுமான ஒரு சுப நாளில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம் ஆலயத்திலே எழுந்தருளப்பட்டு ஆலயத்திலே செய்து முடிக்க வெண்டிய கிரியைகள் அனைத்தையும் பாலசிங்கன் செய்து முடித்தான். சிந்து யாத்திரையின் பயனாக (அதாவது சிந்து என்பது கடல் எனவே கடல் யாத்திரை என்ற அர்த்தத்தினை கொண்டது) கிடைத்த விநாயகர் என்றபடியால் சிந்து யாத்திரைப்பிள்ளையார் என திரு நாமம் சூட்டப்பட்டு வீரர்முனையிலே சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்கு திருவிழா எடுப்பித்து மகிழ்ந்தனர்; பாலசிங்கனும் சீர்பாததேவியும்.
 
தான் ஆலயம் அமைப்பதாக கொண்ட எண்ணம் நிறைவு பெற்ற மகிழ்ச்சி சீர்பாததேவியின் மனதினை ஆட்கொண்டது. எனினும் ஆலயம் அமைக்கும் பணி நிறைவடைந்தமையோடு தமது அரச குலத்தவர்களின் பணி இவ்வாலயத்தில் நிறைவு பெறக்கூடாது என்ற நன்நோக்கோடு தொடர்ச்சியாக இவ்வாலயத்தினை தன்னுடைய அரச பரம்பரையினர்தான் பராமரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற நீண்டதொரு எண்ணத்துடன் கப்பலில் தனக்க துணையாக வந்த தன் அரச பரம்பரையினை சேர்ந்த அரச குலத்தவர்களான சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, முழவன், வெள்ளாயி, நரையாகி, போன்றோரையும் கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்கச் செட்டி, சதாசிவச்செட்டி, சங்ரச்செட்டி போன்ற செட்டிமார்களும் சந்திர சேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் எனும் அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார் போன்றோரையும் வீரர்முனைக் கிராமத்திலே குடியமர்த்த முடிவு செய்தார் சீர்பாததேவியார்.
 
அரசியாரின் விருப்பின்படி சோழநாட்டு மக்கள் அனைவரும் வீரர்முனையிலே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நிலம் சொத்துக்கள் என்பன வழங்கப்பட்டது. அது மாத்திரமன்றி ஆலயத்திலே பூசை வழிபாடுகள் செய்து வருவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் அவ்வாலயத்தினை அண்டி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வழமானதாக அமையவும் நெற்காணிகளையும் வழங்கி, அவர்கள் அனைவரையும் அழைத்து வாலசிங்க மன்னன் அவர்களை நோக்கி “இதில் அரச குலத்தவர்கள், அந்தணர்கள், செட்டிமார், வேளாளர் போன்ற அனைத்து குலத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள் நீங்கள் அனைவரும் உங்கள் இளவரசியின் பெயரால் சீர்பாத குலம் என ஒரு குலமாக வகுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்பதிலிருந்து விலகி சீர்பாதகுலத்தவர் என்ற பெருமையுடன் எக்காலத்திலும் உங்களுக்குள் வேற்றுமை இல்லாதவர்களாய் ஒற்றுமையாக வாழ்வதோடு சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்காக இது முதலாக வீரர்முனையிலே நிரந்தரமாக வாழ ஆரம்பிக்கின்ற நீங்கள் சாதாரணமானவர்கள் அன்று சோழ இளவரசியான சீர்பாத தேவியின் உறவினர்கள். அந்தவகையில் நீங்கள் அரசகுல கௌரவத்தினை உடையவர்கள். இதன்படியாக உங்களக்கு அரவிந்தமலர்,செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதினை வழங்கி உங்களை ஈழத்திலே உயர்வானவர்கள் என்ற மதிப்பினையும் அளிக்கின்றேன்” என்று கூறினான்.
 
இவ்வாறான சிறப்புக்களுடனும் பெருமைகளுடன் சீர்பாதகுல மக்கள் வீரர்முனையிலே தங்கள் வாழ்க்கைப் பயணத்தினை சிந்து யாத்திரைப்பிள்ளையாரின் அருள் துணையுடன் தொடங்கினர். இவர்கள் தங்களுக்கென்று சிறப்பான கலாசாரம், பண்பாடு போன்றவற்றினை தனித்துவமானதாக்கிக் கொண்டு அவற்றின் வழி உயர்ந்த பண்புமிக்க மக்கள் சமுதாயமாக உருவாக்கம் பெற்றனர்.
 
இவ்வாறான சீர்பாதரின் வரலாற்று உண்மைகளை சீர்பாதகுலச் செப்பேடுகளான வீரமுனைச்செப்பேடு, திருகோணமலைச்செப்பேடு, திருக்கோவில் செப்பேடு, கொக்கட்டிச்சோலைச் செப்பேடு, பேன்றவை குறிப்பிடுகின்றது. உதாரணமாக திருக்கோயில் செப்பேட்டுப்பாடலை எடுத்துக்கெண்டால்!
 
சிந்துயாத்திரைப்பிள்ளையார் நாமத்துடன்
நித்திய பூசை நியமமாகச் செய்து
விநாயகர் ஆலயம் விளங்கிடும்பொருட்டு
செந்நெல் விளைவு நிலங்களும்
தேவாலயத்தின் திருப்பணி சாமான் 
எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து…
சீர்பாததேவியின் திருப்பெயரால்
சீர்பாதகுலமென சிறந்த பெயர்சூட்டினர்
அரசர்கும் தேவர்கும் அரும்விருந்தான
வெற்றிக்கொடியை விரும்பிக்கொடுத்து...
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், பாண்டியமன்னனான மாகன் சாதிகளுக்கான குலவிருதுகள் வகுத்தான். இக்குல விருது கூறும் கல்வெட்டில் சீர்பாதரை அமரர் (தேவர்) எனக் குறிப்பிட்டு அவர்களுக்கான குலவிருதான தேர்க் கொடியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடல் வழியாக யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக ‘சிந்து யாத்திரை’பிள்ளையார் என பெயர் சூட்டினார். (சிந்து என்றால் கடல்) அது பிற்காலத்தில் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் என அழைக்கப்படலாயிற்று. அத்தோடு இவ்வாலயத்துக்கு சின்னமாக அரவிந்த மலர்.செங்கோல்,கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும், சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமானது எதிர்காலத்தில் சிறப்புற்று விளங்கும் பொருட்டு வயல் நிலங்களையும் வழங்கி மானியமாக சாசனம் செய்து அதனைச் செப்பேட்டில் பொறித்து ஆலயத்தில் சேமிக்கச் செய்தான் வாலசிங்க மன்னன். அத்துடன் இம் மக்கள் சாதி,குல வேறுபாடுகளின்றி அரசியின் பெயரைக் கொண்டு “சீர்பாதகுலம்”என வகுத்தான் மன்னன் வாலசிங்கன்.
 
இக்கிராமம் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது பலர் கொல்லப்பட்டதுடன் திட்டமிடப்பட்டு பொருளாதாரத்தை நலிவடையச் செய்யும் நோக்கோடு சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக திருக்கோவில், தம்பிலுவில் ஓடிய சம்பவம் உலகறிந்ததே. இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் குடியமர்த்தப்பட்ட எமது கிராம மக்கள் தற்போது கல்வி, பொருளாதாராம் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
 
இங்கு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் மற்றும் ஸ்ரீ முத்துலிங்க பிள்ளையார் ஆலயம் ஆலயமென ஐந்து  கோவில்களும், கல்வி வளர்ச்சிக்கென இராம கிருஷ்ண சங்க வித்தியாலயமும் அத்துடன் தாய் தந்தையரை இழந்த சிறார்களை வைத்துப் பராமரிப்பதற்கென சீர்பாததேவி சிறுவர் இல்லமும் மற்றும் கலை இலக்கிய வளர்ச்சிக்கென இளையநிலா கலை இலக்கிய மன்றமும் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.